December 14, 2018
தண்டோரா குழு
இரண்டு நாள் சலசலப்புகளுக்கு பின்னர் மத்திய பிரதேசத்தின் முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து 3 மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை துவங்கியது. மூன்று மாநில முதல்வர்களையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்ந்தெடுப்பார் என கட்சி தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதற்காக போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மத்திய பிரதேசத்தின்
முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலை கமல்நாத் இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். அதன் தொடர்ச்சியாக போபாலில் உள்ள லால்பரேட் மைதானத்தில் திங்கட்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.