December 13, 2018
தண்டோரா குழு
கோவையில் பள்ளிவாசல் ஒன்றில் எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்தவர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் ஜமா அத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தி பள்ளிவாசல் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை வடகோவை பகுதியில் அஹ்லே சுன்னத் மஜா அத் எனும் பள்ளிவாசல் அமைந்துள்ளது.இந்த பள்ளிவாசலில் சுமார் 511 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் ஜமா அத் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இதனிடையே பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்த எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்த சிலர் நிர்வாகத்தை கைப்பற்ற முற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஜமா அத் தேர்தலை நடத்த பள்ளிவாசல் நிர்வாகம் முற்பட்ட நிலையில் அதற்கு அக்கட்சியினர் முட்டுக்கட்டை போடவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்று தேர்தலுக்கு ஆயத்தமாயினர்.இந்த சூழலில் எஸ்டிபிஐ கட்சியினர் தேர்தலை நடத்த விடாமல் தடுப்பதால் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தங்கள் வேட்பு மனுவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அப்போது பள்ளிவாசல் நெறிமுறைகளுக்கு மாறாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் செயல்படுவதாகவும் போலி ஆவணங்களை தயாரித்து வக்பு வாரியம் மற்றும் காவல்துறையினரை தங்கள் கைக்குள் வைத்து கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாகவும் உடனடியாக நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தொண்டாமுத்தூர் தொகுதியில் தற்போதைய அமைச்சர் எஸ் பி வேலுமணியை எதிர்த்து 2500 வாக்குகள் பெற்றதை அடிப்படையாக கொண்டு அக்கட்சியினர் தாங்கள் தான் பலசாலி என கூறி பள்ளிவாசல் நிர்வாகத்தில் தலையிட்டு வருவதாகவும் கூறினர்.