December 11, 2018 தண்டோரா குழு
மிசோரம் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான லால் துன்ஹவாலா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.
மிசோரம் மாநிலத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன பா.ஜனதா 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் பதிவான வாக்குகள் 13 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆட்சியமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தற்போது வரை ஆளும் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 27 இடங்களிலும், பாஜக 1 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர் தோல்வி முகத்தில் உள்ளனர். மிசோரம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும், முதலமைச்சருமான லால் தன்வாலா தோல்வியடைந்தார். 2 தொகுதிகளில் போட்டியிட்ட அவர், செர்சிப் தொகுதியில், சுயேட்சை வேட்பாளர் லால்நுன்லுங்காவிடம் தோல்வியை தழுவி உள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் அவர், 283 வாக்குகள் வித்தியாசத்தில் லால் நன் துலங்காவிடம் வெற்றியை பறிகொடுத்தார். மற்றொரு தொகுதியான சம்பாயிலும் அவர் தோல்வி அடைந்தார்.