December 10, 2018
தண்டோரா குழு
இணை அமைச்சர் குஷ்வாஹா பதவி விலகியதால் ராம் விலாஸ் பாஸ்வான் கூடுதல் தொகுதிகளுடன் மாநிலங்களவை எம்.பி.யாகிறார்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இணை அமைச்சராக இருக்கும் ராஷ்டரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாஹா தனது இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் மாநிலத்தில் செல்வாக்குபெற்ற ராஷ்டரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திரா குஷ்வாஹா. இவர் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரியாக பதவி வகித்து வந்தார். இவருடன் சேர்த்து பாராளுமன்ற மக்களவையில் இந்த கட்சிக்கு மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக பா.ஜ.க.வுடன் உபேந்திரா குஷ்வாஹா நடத்திய பேச்சுவார்த்தையில் ராஷ்டரிய லோக் சமதா கட்சிக்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரியவருகிறது. இந்நிலையில், உபேந்திரா குஷ்வாஹா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் பாஸ்வானுக்கு ஒதுக்குவதாக இருந்த இரண்டு தொகுதிகளை விட அதிமாக ஐந்து தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இத்துடன் பாஸ்வானை மாநிலங்களவையின் எம்பியாகவும் பாஜக அமர்த்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.