December 10, 2018
தண்டோரா குழு
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இணை மந்திரியாக இருக்கும் ராஷ்டரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாஹா ராஜினாமா செய்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் செல்வாக்குபெற்ற ராஷ்டரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திரா குஷ்வாஹா. இவர் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரியாக பதவி வகித்து வந்தார். இவருடன் சேர்த்து பாராளுமன்ற மக்களவையில் இந்த கட்சிக்கு மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக பா.ஜ.க.வுடன் உபேந்திரா குஷ்வாஹா நடத்திய பேச்சுவார்த்தையில் ராஷ்டரிய லோக் சமதா கட்சிக்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரியவருகிறது. இந்நிலையில், உபேந்திரா குஷ்வாஹா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உபேந்திரா குஷ்வாஹா ராஜினாமா செய்துள்ளது பெரும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர்
அலுவலகத்துக்கு குஷ்வாஹா அனுப்பி வைப்பார் அல்லது, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.