December 5, 2018
தண்டோரா குழு
சென்னையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு அரசு ரூ.5 லட்சம் உதவி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தவர் ஜெயராமன். கொடுத்த பணியை சிறப்பாகச் செய்ததால், ஜெயராமனாக இருந்த அவருக்கு ‘நெல்’ ஜெயராமன் என பெயர் சூட்டினார் நம்மாழ்வார். இதற்கிடையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நெல் ஜெயராமன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்காக அடுத்த சில வாரங்களுக்கு மட்டும் ரூ.15 லட்சத்துக்கு மேல் தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவருக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நெல் ஜெயராமனுக்கு அரசு ரூ.5 லட்சம் உதவி அளித்துள்ளது. இதனை ஜெயராமன் குடும்பத்தினரிடம் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ் ஆகியோர் வழங்கினர். இதையடுத்து, நலிவுற்ற வேளாண் விஞ்ஞானிகளை தமிழக அரசு ஊக்குவிக்கும்; வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமனின் மருத்துவ செலவை அரசு ஏற்பது பற்றி முதல்வருக்கு தெரிவிப்போம் அமைச்சர் காமராஜ் கூறினார்.
இதற்கிடையில், நெல் ஜெயராமன் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவின. அதனை நம்ப வேண்டாம் என ஜெயராமன் சகோதரரின் மகன் ராஜு கூறியுள்ளார். மேலும், அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நெல் ஜெயராமன் தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து ஜெயராமனுக்கு நிதி உதவி வழங்கிய அரசுக்கு ராஜு நன்றி தெரிவித்துள்ளார்.