December 4, 2018
தண்டோரா குழு
பாஜக மூத்த தலைவரும், மத்திய குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு துறை அமைச்சருமான உமாபாரதி, வரும் 2019-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், கஜுரஹோ லோக்சபா தொகுதியில்1989ம் ஆண்டு, வெற்றி பெற்று எம்.பியான உமா பாரதி, 1991, 1996 மற்றும் 1998ம் ஆண்டுகளிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்று அசத்தினார். அத்வானியுடன், இணைந்து ராம ஜென்ம பூமி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது, தீவிர இந்துத்துவாவாதியான, உமா பாரதி தேசிய அளவில் முக்கிய தலைவராக மாறினார்.
இதையடுத்து, நரேந்திர மோடி அரசில், 2017 செப்டம்பர் 1ம் தேதிவரை நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த உமா பாரதி, பிறகு குடிநீர் மற்றும் கழிவகற்றல் துறைக்கான அமைச்சரானார். இந்நிலையில், உமாபாரதி, வரும் 2019-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.
எனினும், ராம ஜென்ம பூமிக்காக தனது போராட்டம் தொடரும் என்றும் இன்று உமா பாரதி அறிவித்துள்ளார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தொடர்ந்து போராட உள்ளதாவும் கங்கை நதியினை தூய்மை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். உமா பாரதி, தனது தேர்தல் விலகளுக்கு காரணமும் இதுதான் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.