December 4, 2018
தண்டோரா குழு
கோவையில் நகை பறிப்பில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த இளைஞர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கோவை அடுத்த வெள்ளலூரில் தமையந்தி (51) என்பவர் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். உடனே சுதாரித்துக்கொண்ட அந்த பெண், திருப்பி கைகளை இழுக்கவே வாகனத்தில் இருந்து செயினை பறித்த இளைஞன் கீழே விழுந்துள்ளான். உடனே, இருவரும் செயினை விட்டுவிட்டு தப்பியோடிய போது, அருகில் இருந்த பொதுமக்கள் இளைஞர்கள் இருவரை பிடித்து விட்டனர். இருவரையும்,மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதை செல்போனில் காட்சிப்படுத்திய பொதுமக்கள், அதை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் இருவரும் சென்னையை சேர்ந்த கார்த்திக், விஜயராகவன் என்பது தெரியவந்தது. இருவரையும் போத்தனூர் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தியும் பறிமுதல் செய்தனர். சமீப காலமாக நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆங்காங்கே இதுபோன்ற பொதுமக்கள் அந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து அடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. முன்னதாக இந்த இருவர் கோவை சாய்பாபா காலனி அருகே சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த ரமாதேவி என்ற பெண்ணிடமும் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.