December 4, 2018
தண்டோரா குழு
தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்ற மதிமுக பொது செயலாளர் வைகோவின் சவாலை ஏற்பதாகவும், தமிழகத்திற்கு பிரதமர் நிச்சயம் வருவார் எனவும் எந்த விதமான போராட்டங்கள் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனக்கு எதிராக நடந்த மிகப்பெரிய சதிச்செயலை கண்டித்து திமுகவில் இருந்து வெளியேறி, அதற்கு காரணமானவர்களை பழிவாங்குவேன் என சபதம் எடுத்தார். ஆனால் வைகோ தனது நிலைபாட்டில் இருந்து மாறி, எந்த தீய சக்திக்கு எதிராக போராடுவேன் என சொன்னாரோ,அந்த தீய சக்திகளுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் நடந்து வருவது அவருடைய நம்பகதன்மையை தமிழக மக்களிடம் கேள்விக்குறியாக்கி இருக்கின்றது.
தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வார்த்தைகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பயன்படுத்தி இருப்பது சிலரை திருப்தி செய்யவும், அரசியல் ரீதியான ஆதாயம் தேடுவதற்கும் தான். வைகோவின் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழகத்திற்கு பிரதமர் மோடி நிச்சயம் வருவார். அப்போது நடக்கும் எந்த விதமான போராட்டங்கள் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்.
யாரையாவது திருப்திபடுத்திபடுத்த மற்றவரை அவமானப்படுத்தி நடக்க வேண்டுமென்றால் அது தமிழகத்தில் நடக்காது. வைகோவின் பேச்சு மதிமுக தலைவர்களையே தலைக்குனிய வைத்துள்ளது. எப்படியாவது திமுகவுடன் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும் கூட்டணியில் இருக்க வேண்டும் என வைகோ நினைக்கிறார். திமுகவில் உள்ளவர்கள் மதிமுகவை ஏளனமாக பார்க்கின்றனர். வேண்டா விருந்தாளியாக மதிமுக திமுக கூட்டணியில் இருக்கிறது. யாரை முதல்வராக்க வேண்டும் என நினைக்கின்றனரோ அவர்களை திருப்திபடுத்தவே வைகோ இப்படி பேசி வருகிறார்.
மேகதாதுவில் அணை கட்ட ஆய்வறிக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும் வகையில் அந்த ஆய்வறிக்கை அமையாது என நம்புகிறேன். மேகதாது அணைக்கு பா.ஜ.க முழு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய ஆய்வு குழுவின் முழு அறிக்கை வந்தவுடன் கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.