December 3, 2018
தண்டோரா குழு
கஜா புயல் நிவாரண நிதிக்காக தான் சேமித்து வைத்த பணத்தை கொடுத்த சிறுமியை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சைக்கிளை பரிசாக வழங்கினார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளானதால் மக்களின் இயல்பு நிலை மாறியுள்ளது. தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தேவையான பொருட்களையும், நிதிஉதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகள் அக்சயாஸ்ரீ. இவர் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வருவதற்காக சைக்கிள் வாங்க அவர் சேமித்து வைத்த 520 ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தார். இதனையறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவி அக்சயாஸ்ரீயை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சிறுமிக்கு புதிய மிதிவண்டி ஒன்றை பரிசாக வழங்கினார்.