December 3, 2018
தண்டோரா குழு
எகிப்து கெய்ரோ திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பிரபல நடிகை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் ‘கெய்ரோ சர்வதேச திரைப்பட விழா’ (Cairo Film Festival) நடந்து வருகிறது. இவ்விழாவில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இவ்விழாவிற்கு நடிகை ரானியா யூசெப் கருப்பு நிறத்தில் தொடை தெரியும் அளவிற்கு மெல்லிய உடையணிந்து சென்றுள்ளார். இந்த ஆடை விவகாரம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில்,பொதுவாக எகிப்தைப் பொறுத்தவரை என்ன தான் சர்வதேச திரைப்பட விழாக்கள் என மார்டன் ஸ்டைல்கள் அரங்கேறி வந்தாலும், அந்த நாட்டு மக்களும், அரசும் இன்னும் பழமையை கடைப்பிடித்து வருகின்றன.
இதற்கிடையில், நடிகை ரானியா யூசெப் ஆபாச உடை அணிந்து வந்தது பாலுணர்வை தூண்டுவதாக அமைந்திருந்ததாக அம்ரோ அப்தெல் சலாம், சமிர் சப்ரி என்னும் 2 வழக்கறிஞர்கள் கெய்ரோ நீதிமன்றத்தில் அந்த நடிகை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரத்தில் நடிகை ரானியா யூசெப் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
இப்படி நான் ஆடை அணிந்தது இதுவே முதல் முறை, இது பெருத்த கோபத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என நான் உணரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். எகிப்து சமூகத்தின் மதிப்பினைக் காக்க உறுதி எடுத்துக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்து நாட்டின் சட்டப்படி நடிகை ரானியா யூசெப் மீதான குற்றம் நிரூபணமானால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படலாம். இவர் மீதான வழக்கு ஜனவரி 12 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.