December 1, 2018
தண்டோரா குழு
அர்ஜென்டினா நாட்டில் இந்தியா,ரஷ்யா,சீனா இடையே 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அய்ரெஸ் நகரில் நடைபெற்றுவரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக,அர்ஜெண்டினா சென்றுள்ளார்.அங்கு சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட உலக தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி,சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன் முத்தரப்பு ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஜப்பான்,அமெரிக்கா,இந்தியா ஆகிய நாடுகளின் பெயர்களில் உள்ள முதல் எழுத்துகளை குறிப்பிட்டு ‘JAI’ என்றால் இந்தியில் வெற்றி என்று அர்த்தம் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
பின்னர்,ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் மற்றொரு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மோடி பங்கேற்றார்.RIC என்றழைக்கப்படும் ரஷ்யா,இந்தியா,சீனா நாட்டின் இந்த கூட்டமைப்பின் சார்பில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மூன்று நாட்டு தலைவர்களும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்று ஆலோசிக்காத நிலையில்,12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.