November 28, 2018
தண்டோரா குழு
அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் சர்கார்.இப்படம் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது.இப்படம் ரசிகர்கள் மத்திலும் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்தது.ஆனால்,இந்த படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் இலவச பொருட்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் காட்சிகள் இருப்பதாக கூறி அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதுமட்டுமின்றி,பல தியேட்டர்களில் சர்கார் படத்தின் பேனர்களை அ.தி.மு.க-வினர் கிழித்து போராட்டம் நடத்தினார்கள்.இதனையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.
இதற்கிடையில்,முன் ஜாமீன் கேட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.பின், அவரை கைது செய்ய நவம்பர் 27-ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து,நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது,ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.சர்கார் படத்தில் அரசுத் திட்டங்களை விமர்சித்ததற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.மேலும்,எதிர்காலத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படங்களில் அரசை விமர்சிப்பது போன்ற காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.இதனால் சர்கார் விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது.
இந்நிலையில்,அரசின் திட்டங்களை விமர்சிப்பது என்பது தன்னுடைய கருத்து சுதந்திரம்.அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது. இனி வரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து,ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.