November 28, 2018
தண்டோரா குழு
கஜா புயல் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல சரக்கு ரயிலில் கட்டணம் கிடையாது என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் நாகை,புதுக்கோட்டை,திருவாரூர்,தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.கஜா புயலால் லட்சக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்தன.தற்போது வரை இந்த மாவட்டங்களுக்கு மின் விநியோகம் கொடுக்க மின் ஊழியர்கள் இரவு பகல் பாராமல் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநில மக்களும் நிவாரணப் பொருட்களை தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி புயல் பாதிப்பு நிவாரணப் பொருட்களை சரக்கு ரயிலில் கொண்டு செல்ல கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் ரயில்வே அமைச்சர் முதல்வரின் கோரிக்கையை ஏற்று கஜா புயல் பாதிப்பு நிவாரணப் பொருட்களை வரும் டிசம்பர் 10ம் தேதி வரை இலவசமாக கொண்டு செல்லாம் என்றும் அதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்றும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.