November 28, 2018
தண்டோரா குழு
நாகையில் கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை,புதுக்கோட்டை,திருவாரூர்,நாகை,திருச்சி,புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.முதல்வர் பழனிச்சாமி,துணை முதல்வர் ஓபிஎஸ்,ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.அப்போது,மோசமான வானிலை காரணமாக திருவாரூர்,நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது.
இந்நிலையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக,ரயில் மூலம் இன்று காலை நாகப்பட்டினத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றடைந்தார்.அம்மாவட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.பின்னர்,புயலால் வீடுகளை இழந்தவர்கள்,கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிகளையும்,தென்னைகளை இழந்தவர்களுக்கு தென்னங்கன்றுகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மேலும்,புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி,பருப்பு,பாய்,போர்வை உள்ளிட்ட 27 விதமான நிவாரணப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.பின்னர்,கஜா புயல் பாதிப்பு மற்றும் அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் தொடர்பான புகைப்படங்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
இதையடுத்து,நாகை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு,மக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களையும் பார்வையிட்டார்.அதைத் தொடர்ந்து,கஜா புயல் பாதித்த பகுதிகளில், முதலமைச்சர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
பின்னர் புத்தூர் பகுதியில் ஆய்வை முடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,வேளாங்கண்ணி அருகே பிரதாமராமபுரம் பகுதியில் கஜா புயலால் வேருடன் சாய்ந்த தென்னை,மா,முந்திரி ஆகியவற்றையும் சேதமடைந்த வேளாண் பயிர்களையும் பார்வையிட்டார்.நாகையில் பல்வேறு இடங்களுக்கு சென்று புயல் பாதிப்பை பார்வையிட்டு,அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.இதேபோல் திருவாரூரிலும் இன்று ஆய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.