November 27, 2018
தண்டோரா குழு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் திடீரென சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவுடன் தோழமை கட்சிகளாக விசிக, மதிமுக இருந்து வருகிறது. தேர்தல் சமயத்திலும் இக்கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்மையில் திமுக பொருளாளர் துரைமுருகன் ஒரு பேட்டியில், தேர்தல் தேதி அறிவித்தபிறகுதான் கூட்டணி குறித்து பேச முடியும் என்றும், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் நட்பு கட்சிகள்தான், கூட்டணி கட்சிகள் இல்லை என்றும் கூறியிருந்தார். இதனால், இந்த கட்சிகள் திமுக கூட்டணியில் இல்லையா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், கஜா புயலால் சேதத்தை சந்தித்த புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க டிடிவி தினகரன் சென்றார். அப்போது, வழியில் திருமாவளவன் சந்திக்க, இருவரும் பேசிக்கொண்டனர்.இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் – திருமாவளவன் ஆகியோரின் சந்திப்பு புதிய கூட்டணி உருவாகிறதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.