November 26, 2018
தண்டோரா குழு
குடிபோதையில் கார் ஓட்டிய நடிகை காயத்ரி ரகுராமுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.காயத்ரி ரகுராம் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் என்பவரின் மகளாவார்.காயத்ரி ரகுராம் திரைப்பட நடிகை மட்டுமின்றி நடன பயிற்றுனரும் ஆவார்.
கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் மேலும் பிரபலமடைந்தார்.தற்போது அவர் தொலைகாட்சி நிகழ்சிகளிலும் பணியாற்றி வருகின்றார்.இந்நிலையில், சென்னை திரு.வி.க.பாலம் பகுதியில் அபிராமபுரம் போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்றை நிறுத்தியுள்ளனர்.அந்த காரில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது.
இது பற்றி கேட்ட போது போலீசாருடன் வாக்குவாதம் செய்த அவர்,பின்னர் மது குடித்ததை ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ3500 அபராதம் விதித்தனர்.தொடர்ந்து நடிகை காயத்ரியை கார் ஓட்ட அனுமதிக்காத போலீசார்,போக்குவரத்து காவலரை டிரைவராக வாகனத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.