November 24, 2018
தண்டோரா குழு
கஜா புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கஜா புயலின் கோரதாண்டவத்தால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பட்ட மக்களும் உதவி வருகின்றனர். அதைப்போல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர தமிழ் திரையுலகினரும் உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்ச ரூபாயும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிதியுதவியாக அளித்துள்ளனர்.
நடிகர் விஜய் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.4.50 லட்சம் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு வலியுறுத்தியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்., இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும், 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.