November 24, 2018
தண்டோரா குழு
இரயில் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த GRP help app எனப்படும் புதிய செயலியை ஏ.டி.ஜி.பி. சைலேந்தர் பாபு கோவை இரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ரயில் பயணிகள் அனைவரும் இந்த செயலியை ரயிலில் பயணிக்கும் போது தரவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். திருட்டு, பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, சந்தேகத்திற்கிடமான பொருட்கள், நபர், கைவிடப்பட்ட சிறார்கள், குழந்தைகள் என ரயிலிலோ, ரயில் நிலையத்திலோ பார்க்க நேர்ந்தால் உடனே இந்த செயலி மூலம் தகவல் தெரிவித்தால், 2 நிமிடங்களில் ரயில்வே காவல்துறையினர் அங்கு வந்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் இந்த செயலி உதவும்.
போபாலில் இதனுடைய தலைமை அலுவலகம் உள்ளதால், வட மாநிலத்திற்கு சென்றால் கூட இந்த செயலியை பயன்படுத்தலாம். சென்றாண்டு மட்டும் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுபோன்ற நேரத்தில் காவல் நிலையம் சென்று தான் புகார் அளிக்க வேண்டும் என்பதில்லை, இந்த செயலி மூலம் என்ன நடந்தது என்று புகார் தெரிவித்தால், வீட்டிற்கு பெண் ரயில்வே காவல் அதிகாரி வந்து விசாரித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.