November 23, 2018
தண்டோரா குழு
கோவை மதுக்கரை வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பாக கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
கோவை மதுக்கரை வனசரகத்திற்குட்பட்ட செங்கனூர், மோலப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். கடந்த வாரத்தில் வனத்தை ஒட்டிய பகுதியில் சின்னராஜ் என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்த போது, அங்கிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை பிடித்து கொன்று விட்டதாக புகார் எழுந்தது. மேலும் அப்பகுதியில் இருந்த ஆடு மற்றும் நாய், ஒன்றையும் சிறுத்தை கொன்றுவிட்டது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்ததை அடுத்து, அப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், மோளப்பாளையம் பகுதியில் அந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். சிறுத்தை பிடிப்பட்டால் , தலைமை உயிர் பாதுகாவலர் ஒப்புதல் பெற்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.