November 20, 2018
தண்டோரா குழு
கஜா புயல் சேதங்களை முதல்வர் பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் நேரில் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.
வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.இந்த புயலின் தாக்கத்தால் தஞ்சை,திருவாரூர்,நாகை,ராமநாதபுரம், புதுக்கோட்டை,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன.இதுவரை நடந்த கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேர் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு என தகவல் தெரிவிக்கின்றது.12 மாவட்டங்களில் 32,707 ஹெக்டேர் நெல்,30,100 ஹெக்டேர் தென்னை,7,636 ஹெக்டேர் மக்காச்சோளம் சேதம் அடைந்துள்ளன.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.சேதத்தை மதிப்பிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்,புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்டா மாவட்டங்களுக்கு சென்றுள்ளார்.இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த அவர் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.
இதையடுத்து,புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குளம் பகுதியில் கஜா புயல் சேதங்களை முதல்வர் பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும்,பட்டுக்கோட்டை,திருவாரூர்,நாகை ஆகிய இடங்களில் முதல்வர் பழனிசாமி புயல் பாதிப்பை ஆய்வு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.