November 15, 2018
தண்டோரா குழு
கோவையில் பெண்களிடம் தொழில் தொடங்க பணம் பெற்று தருவதாகக் கூறி ரூபாய் 64 லட்சம் மோசடி செய்த வாலிபரை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவை உப்பிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் அமலன்(28).இவரும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா ஸ்ரீஜா (32) மற்றும் சிலர் இணைந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துக் கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில்,ரேஷ்மா ஸ்ரீஜா ஜான் அமலன் மீது கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸிடம் புகார் மனு அளித்துள்ளார்.அம்மனுவில்,புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டிருந்த தன்னிடமும்,தோழி சசிகலா,தாரா,ஷிபா ஆகியோரிடமும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக ஜான் அமலன் அறிமுகமானார்.
அப்போது,புதிய தொழில் தொடங்க வெளிநாடு வாழ் இந்தியர் நிதி ரூ.25 கோடி பெற்றுத்தருவதாக கூறி அவர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தவணைகளாக எங்களிடம் ரூ.64 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார்.ஆனால்,பல மாதங்களாகியும் எந்த நிதியும் பெற்று தரவில்லை.எங்கள் பணத்தையும் திருப்பி தரவில்லை ஆகையால் நாங்கள் இழந்த பணத்தை பெற்றுத் தரவேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில்,பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ.நட்ராஜ் நடத்திய விசாரணையில் ஜான் அமலன் மோசடி செய்திருப்பது உறுதி செய்யபட்டது.இதையடுத்து,நேற்று இரவு ஜான் அமலனை போலீசார் கைது செய்தனர்.மேலும்,இவரது நண்பர்களான தில்ஜித்,கிட்டு என்ற சரவணன், புருஷோத்தமன் ஆகியோரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.