November 14, 2018
தண்டோரா குழு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான,’இஸ்ரோ’ சார்பில்,அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக,’ஜிசாட் – 29′ என்ற செயற்கைகோள்,இன்று(நவ.,14) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
தகவல் தொடர்பு,வானிலை,பாதுகாப்பு உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்காக,பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் உதவியுடன்,செயற்கைகோள்களை, இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தி வருகிறது.இங்கிலாந்து நாட்டின் இரண்டு செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் உதவியுடன் கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.இதனைத் தொடர்ந்து அதிக எடை கொண்ட ஜி சாட் 29 செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 – டி2 ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவும் பணியில் கடந்த சில மாதங்களாக இஸ்ரோ ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில்,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மாலை 5.08 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி மாக் 3- டி2 ராக்கெட் உதவியுடன் அதிநவீன திறன் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜி சாட் 29 செயற்கைகோளை இஸ்ரோ திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தியுள்ளது.இதற்கான கவுன்டவுன் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.இந்த செயற்கைகோளானது 3,423 கிலோ எடை கொண்டதாகும்.
உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள,ஜிசாட் – 29 செயற்கைகோள்,குக்கிராமங்களையும் உள்ளடக்கி,நாடு முழுவதும்,அதிநவீன தகவல்தொடர்பு சேவையை மேம்படுத்த,முக்கிய பங்காற்றும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட்டை விட தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரண்டு மடங்கு அதிக திறன் கொண்டதாகும்.இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ராக்கெட் இஸ்ரோவின் மைல் கல்லாக அமைந்துள்ளது.ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.