October 24, 2018
தண்டோரா குழு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் ஆயுட்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.இதற்கிடையில்,அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.இதையடுத்து,ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு சார்பில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,இந்த விசாரணை ஆணையம் அப்போலோ மருத்துவமனையில் ஆய்வு,டாக்டர்கள்,மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை என அனைத்து தரப்பிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.அதைபோல் சசிகலா தரப்பிலும் அவ்வப்போது குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஏற்கெனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டது.இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் ஆயுட்காலம் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.