October 24, 2018
தண்டோரா குழு
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று கண்டன பேரணி நடத்தினர்.
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து கடந்த சில தினங்களாக சபரிமலை கோவிலுக்கு சென்ற இளம் பெண்கள் பலருக்கு அம்மாநில அரசு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்து இருந்தது.மேலும் கோவிலுக்கு சென்ற பெண்களை பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சபரிமலையின் புனிதத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஐயப்பன் பஜனை பாடி பேரணியில் ஈடுபட்டனர்.முன்னதாக காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பாக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இல.கணேசன் பேரணியை துவக்கி வைத்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன்,சபரிமலையின் புனிதத்தையும் ஐதீகத்தையும் காக்க வேண்டும்.சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகள் கண்டனத்திற்கு உரியது என்றார்.
தொடர்ந்து ஐயப்பன் பஜனை பாடல்கள் பாடிய படியும்,கேரள அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்ற பாஜகவினர் என் ஜி.என்.லே-அவுட் பாரதியார் சாலை வழியாக சென்று காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையம் முன்பாக கூடினர்.பின்னர் அப்பகுதியில் சபரிமலை புனிதம் காக்க என்ற தலைப்பில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.