October 13, 2018
தண்டோரா குழு
சபரிமலைக்கு செல்லும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் என்ற சர்ச்சை பேச்சுக்கு மலையாள நடிகர் மன்னிப்பு கோரியுள்ளார்.
10வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.
இதனால்,உச்சநிதிமன்ற தீர்ப்புக்கு பல்வேறு அமைப்புகளும் முக்கிய பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது.எனினும்,கேரள அரசு சபரி மலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.இதையடுத்து,வரும் 18ஆம் தேதி முதல் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதற்கிடையில்,கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மலையாள நடிகர் கொல்லம் துளசி,சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களை வெட்டி ஒரு பாதியை டெல்லிக்கும் இன்னொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வீச வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.
இதையடுத்து,மலையாள நடிகர் கொல்லம் துளசியின் இந்த பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.இதற்கிடையில், இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.இந்நிலையில் தான் பேசியது தவறுதான் என நடிகர் கொல்லம் துளசி, மன்னிப்பு கோரியுள்ளார்.