October 10, 2018
தண்டோரா குழு
கோவை கோவைப்புதூர் பகுதியில் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த முதியவரை இளைஞர் ஒருவர் வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புதூரைச் சேர்ந்தவர் ஜமில் அகமது(65).இவர் இன்று மதியம் கோவைபுதூரில் உள்ள தனது வீட்டின் அருகே சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது சாலையில் இருந்த மரத்தின் பின்புறத்தில் மறைந்திருந்த இளைஞர் ஒருவர் முதியவரை பின் தொடர்ந்து வந்து கத்தியால் குத்தியுள்ளார்.இதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் கரும்புகடையை சேர்ந்த பூங்கா நகரில் வசித்து வரும் யாக்கோப்பின் மகன் ரிஸ்வான்(34) தான் இந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ரிஸ்வானை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.கோவை புதூர் பகுதியில் பட்ட பகலில் நடந்த இச்சம்பவதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.