October 4, 2018 
தண்டோரா குழு
                                தமிழகத்தில் வரும் 7ம் தேதி மிக அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டும் லேசாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 தினங்களில் கனமழை மற்றும் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (5-ந்தேதி) குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக கேரளாவில் இன்று காலை முதல் 7-ந்தேதி காலை 4 மணி வரை 4 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் 8-ந்தேதி மழை குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் தென்மேற்கு வங்க கடலில் மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,  தமிழகத்தில் அக்,7ம் தேதி பலத்த  கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக பேரிடர் மேலாண்மை இயக்குனர் சத்திய கோபால் தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து,  நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.