September 28, 2018
தண்டோரா குழு
முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசிய வழக்கில் எம்எல்ஏ கருணாசுக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் மற்றும் தியாகராய நகர் காவல்துறை துணை ஆணையர் குறித்தும் அவதூறாக பேசினார்.அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து,அதற்கு கருணாஸ் வருத்தமும் தெரிவித்தார்.இதற்கிடையில்,நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து,அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட போலீசாரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில் இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.