August 30, 2018
தண்டோரா குழு
ஸ்டாலின் தோளில் மிகப் பெரிய பொறுப்பு, கடமை உள்ளது என இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கலைஞரின் புகழுக்கு வணக்கம்’ என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் காங்.மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, காஸ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்று புகழ் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பேசிய இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசுகையில்,
கருணாநிதி இந்தியா முழுவதற்கும் சொந்தமானவர். கருணாநிதி மானுடம் முழுவதற்கும் சொந்தமானவர்.கருணாநிதி தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொந்தமானவர்.ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தமிழ்த் தாயின் தவப் புதல்வன் கருணாநிதி.ஸ்டாலின் அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டா என்று கேட்டது தனி மனிதக் குரல் அல்ல.ஸ்டாலினின் குரல் அது தமிழ்ச் சமுதாயத்தின் குரல். கருணாநிதி திமுக என்ற கட்சிக்குச் சொந்தமானவர் அல்ல. மானுடத்தின் சமத்துவத்திற்காக, சகோதரத்துதிற்காக போராடியவர், சமூக நீதிக்காக போராடிய மாபெரும் போராளி. கருணாநிதிக்கு மரணம் இல்லை.அவரது வாழ்க்கை அர்த்தமிக்க பாடமாக அனைவருக்கும் இருக்கும். 90களில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தது.தேவெ கெளடா பிரதமராக அமர்ந்தார்.கருணாநிதியிடமிருந்து மெட்ராஸ் என்பதை சென்னை என மாற்றக் கோரிக்கை வந்தது. கருணாநிதி என்பது ஆங்கிலத்திலும் கருணாநிதிதானே என்று கேட்டார் கருணாநிதி. இந்திரஜித் குப்தாவிடம் இதை விளக்கினேன். இந்திரஜித் குப்தாவும் கருணாநிதி கோரிக்கையை ஏற்று சென்னை என்று மாற்றினார். சென்னை நகரம் இருக்கும் வரை அது கருணாநிதி பெயரை சொல்லிக் கொண்டிருக்கும். கருணாநிதி காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பது நாம் செய்த பாக்கியம்.கருணாநிதி என்றென்றும் வாழ்வார், வாழ்ந்து கொண்டிருப்பார். மானுடம் இருக்கும் வரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றார்.
மேலும், ஸ்டாலின் தோளில் மிகப் பெரிய பொறுப்பு, கடமை உள்ளது. அப்பாவின் நல்ல பிள்ளையாக, கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய போராளியாக திகழ முடியும்நீங்கள் வெல்வீர்கள் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு டி.ராஜா வாழ்த்து தெரிவித்தார்.