May 18, 2018
தண்டோரா குழு
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டால் அரசு பள்ளியில் சேர்க்கை குறைவதாகவும்,இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிநிரவலை முழுமையாக கைவிட வேண்டும்,ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:20 என்பதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் உள்ளே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்,கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி,ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதாகவும் எனவே அரசு உடனடியாக இதனை கைவிட வேண்டும் என ஆசிரியர்கள் போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.