March 26, 2018
தண்டோரா குழு
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆந்திர மாநில அரசியல் கட்சிகள் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், நிதித் தொகுப்பும் வழங்காததைக் கண்டித்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலுங்கு தேசம்கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறியது.
பின்னர், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர மக்களவை சபாநாயகரிடம் தெலுங்கு தேசம் கட்சி நோட்டீஸ் அளித்தது. அதைபோல் ஆந்திர மாநில எம்.பி.க்கள் போராட்டம் காரணமாக அவை நடவடிக்கையை முடங்கி உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முதன் முதலில் கடிதம் கொடுத்து உள்ளது. அதன் பின் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நோட்டீஸ் அளித்துள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாளில் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.