March 23, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்று மத்திய நீர்பாசனத்துறை செயலாளருக்கு கர்நாடக தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து விவாதிக்க கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம் கடந்த 16–ந் தேதி டெல்லியில் கூட்டப்பட்டது. ஆனால் அந்த கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு 22–ந் தேதிக்கு(நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எங்கும் சொல்லவில்லை. அதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் கர்நாடகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதுபற்றி மத்திய அரசுக்கு தலைமை செயலாளர் ஒரு விரிவான கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிததத்தின் நகல் அனைத்து எம்.பி.களுக்கும் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய நீர்பாசனத்துறை செயலாளருக்கு கர்நாடக தலைமை செயலாளர் எழுதி உள்ள கடிதத்தில்,
காவிரி பிரச்சினை தீர்வு குழு, கண்காணிப்பு ஆணையம் ஆகிய இரு அமைப்புகளை உருவாக்க வேண்டும்”. உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இரு அமைப்புகளும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி,நீர் பங்கீடு குறித்த முடிவை எடுக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடவில்லை”செயல் திட்டம் மட்டுமே உருவாக்க உத்தரவிட்டுள்ளது”. காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் 11 பேர் கொண்ட புதிய குழுவை மற்றும் 6 பேர் கொண்ட காவிரி நடைமுறைபடுத்த குழு அமைக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் வாதம் தீர்ப்புக்கு முரணானது எனக் கூறியுள்ளார்.