November 14, 2017
தண்டோரா குழு
விவசாயத்துக்கான உரங்களை தயாரிப்பதற்காக சிறுநீர் வங்கிகளை அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி கூறும்போது,
தாலுகா அளவில் சிறுநீர் சேமிப்பு வங்கி அமைத்து அதன் மூலம் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யலாம். இதன் மூலம் உர இறக்குமதிக்கு ஆகும் செலவை குறைக்க முடியும். இந்த முடிவு ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நான் சுவிடன் நாட்டு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். மனிதர்களின் சிறுநீரில் ஏராளமான நைட்ரஜன் உள்ளது. ஆனால், அனைத்தும் வீணடிக்கப்படுகிறது. வீணாவதை, லாபமாக மாற்றுவதே எனது கொள்கை.
ஆகையால், இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்திற்கு மாற்றாக இயற்கை உரம் உள்ளது. இதனுடன் நைட்ரஜனை சேர்க்கும் போது விவசாயிகளுக்கு உதவும்.10 லிட்டர் கேன்களில் சேகரிக்கப்படும் சிறுநீரை, விவசாயிகள் தாலுகா மையத்திற்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இதற்கான கேன்களை அரசே விநியோகம் செய்யும். இதன் மூலம் ஒரு லிட்டர் சிறுநீருக்கு ரூ. 1 விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த திட்டம் முதலில் கிராம பகுதிகளில் செயல்படுத்தலாம். இங்குதான், சிறுநீர் தண்ணீருடன் கலந்து கழிப்பறைக்கு செல்லாது. அதனை சுத்தமான இயற்கை உரமாக உற்பத்தி செய்யலாம். இந்த திட்டத்தின் பொருளாதாரம் மற்றும் சாத்தியம் குறித்து எனக்கு உறுதியாக தெரியாது என்றார்.
மேலும், இதற்கான ஆரம்ப கட்ட சோதனை நாக்பூரில் உள்ள எனது வீடருகே உள்ள ஆய்வகத்தில் நடந்தது என்றும் அவர் கூறினார்.