November 11, 2017
லண்டன் நகரில் வீடு இல்லாததால் சாலையில் தன் வாழ்நாளை கழிக்கும் 52 வயது முதியவர், கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் சேர்ந்து படித்து வருகிறார்.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்தவர் ஜெஃப் எட்வார்ட்ஸ்(52). அவர் தன் இளம் வயதிலேயே பள்ளி படிப்பை நிறுத்திவிட்டார். அதன்பிறகு, வயலில் பணியாற்றி வந்தார். ஆனால், அந்த பணியில் தொடர விரும்பாமல், அதை விட்டுவிட்டார். பிறகு, கேம்பிரிட்ஜ் நகரில் தங்க வீடு இல்லாத நிலையில் இருந்த அவர், பத்திரிக்கைகளை விற்பனை செய்து, தனது வாழ்நாளை கழித்து வந்தார்.
இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட படிப்பை முடிக்க வேண்டும். அதை முடித்தால் தான், பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க முடியும். அதன்படி, எட்வர்ட்ஸ்அந்த படிப்பை முடித்தார்.தற்போது, இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, ஆங்கில இலக்கியத்தை படித்து வருகிறார்.
“கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்றும், என்னை போன்ற ஒருவரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ளும் என்றும் நினைக்கவில்லை. ஆனால் எனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர் தான், இந்த பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க ஊக்கம் அளித்தார்” என்று எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.