• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.ம.ந.கூ இனி தொடருமா?

May 20, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாகப் பலமான மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என உதயமானது தான் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் மக்கள் நலக் கூட்டணி அணி.

சட்டப் பேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் வெளியானது. இதில் அதிமுக 134 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.

ஆனால், திமுக அதிமுகவிற்கு மாற்றாக மூன்றாவது அணி என உருவான கேப்டன் மக்கள் நலக் கூட்டணி ஒரு இடத்தை கூட பெறமுடியவில்லை.

தேர்தலில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த தேமுதிக மக்கள் நலக்கூட்டணி இனியும் தொடருமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் அணித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும். தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

விசிக கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில்,

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த மாற்று அரசியலுக்கு ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது.

எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். மேலும், நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும் இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நெடுங்காலமாக ஆட்சியதிகாரத்தை நுகர்வதற்கு வாய்ப்பே இல்லாத விளிம்பு நிலை மக்களுக்கு உரிய நலன்களை முன்னிறுத்தும் கூட்டணி ஆட்சி உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில்,

தேர்தல் முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை எனவும் இத்தகைய வெற்றியைப் பெற்றமைக்காக அதிமுக, திமுக கட்சிகள் வெட்கப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நமது அரசியல் நிலைப்பாடு சரியே ஊழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு, மதுவிலக்கு, மாற்று ஆட்சி போன்ற ஆதாரமான கொள்கைகளை முன்வைத்து நாம் தேர்தலைச் சந்தித்தோம் எனக் குறிப்பிட்டுள்ள அவர் அதற்கான அவசியம் இன்னமும் இருக்கிறது. எனவே ம.ந.கூ, தேமுதிக, தாமாக ஆகிய கட்சிகளின் ஒற்றுமையும், கூட்டணியும் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சியும், மக்கள் நலக் கூட்டணி,

தேமுதிக, தமாகா உள்ளிட்ட ஆறு கட்சிகளும் தொடர்ந்து போராடுவோம். தேர்தல் களத்தில் முன்வைத்த முழக்கங்களைச் செயலாக்க பாடுபடுவோம் என மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஊழல் பணநாயகம் வென்றுள்ளது. அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைத்து வாக்குகளை வாங்கி இருக்கின்றன. தமிழகத்தில் இந்த நச்சுச் சுழல் தொடர விடாமல், மக்கள் ஆட்சித் தத்துவம் காக்க உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம் எனக் கூறியுள்ளார்.

தமிழ் நாட்டில் ஊழல் பணநாயகத்திற்கு எதிராக மக்கள் நலனையும், ஜனநாயகத்தையும் காக்க நாங்கள் அமைத்துள்ள ஆறு கட்சிகளின் கூட்டணி மிக்க உறுதியுடன், வலுவாகத் தமிழக அரசியல் களத்தில் இயங்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க