August 17, 2026
தண்டோரா குழு
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பாக கோவை நேரு விளையாட்டு அரங்கில்,10-வது ஆண்டு தடகளப் போட்டிகள் நடைபெற்றது இதனை கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் துவக்கி வைத்தார்.
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படும், 10-வது ஆண்டு தடகளப் போட்டி – 2026, கோவையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், ஆகஸ்ட் 17ம் தேதி துவங்கியது வரும் 19ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்க்க உள்ளனர்.
இளம் விளையாட்டு வீரர்கள் தங்களின் விளையாட்டுத் திறன், ஒழுக்கம் மற்றும் போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக இந்நிகழ்வு அமைகிறது.இந்த விளையாட்டு போட்டிகளை,கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன்,துவக்கி வைத்தார்.
தொடக்க விழாவில் சிறப்பான முறையில் தேசியக் கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும் கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் கொடிகள் ஏற்றப்பட்டன.
முக்கிய விருந்தினர்களாக சிந்தனை கவிஞர் கவிதாசன், மற்றும் பி.ஏ இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர், மகேஷ் நாராயணன், கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். பின்னர், பல்வேறு வயதுப் பிரிவுகளுக்கான ஓட்டப்பந்தயம், களப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 12 வயதுக்குட்பட்டோர், 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் தங்களின் வேகம், வலிமை, சகிப்புத்தன்மை, சுறுசுறுப்பு மற்றும் விளையாட்டு நற்பண்புகளை வெளிப்படுத்த உள்ளனர். மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்ப்பதுடன், ஒழுக்கம், குழு உணர்வு, விடாமுயற்சி மற்றும் சிறப்பை நோக்கிய முயற்சி ஆகிய பண்புகளை வளர்ப்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சியில் பிஎஸ்ஜி பப்ளிக் பள்ளியின் முதல்வர் கிரிஷ் ஈஸ்வரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.