July 20, 2026
தண்டோரா குழு
தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில் “இன்டர்நேஷனல் கிராண்ட்மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி 2027” அறிமுக நிகழ்ச்சியும், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் இன்று கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஹோட்டல் M Inn-ல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில்,சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் மீண்டும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் (GM) ஓபன் சதுரங்கப் போட்டி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.மிராக்கிள் ஸ்கூல் ஆஃப் செஸ் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சதுரங்கச் சங்கம் (CDCA) இணைந்து, அக்ஷயா பொறியியல் கல்லூரியின் தலைப்பு அனுசரணையில், இப்போட்டி 2027 ஜனவரி 11 முதல் 18 வரை நடைபெறுகிறது.
1987-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற சக்தி சுகர்ஸ் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் போட்டிக்குப் பிறகு நடைபெறும் முதல் GM போட்டியாக இது அமைகிறது. போட்டியில் A, B, C (ப்ளிட்ஸ்), D என நான்கு பிரிவுகள் இடம்பெறுகின்றன. மொத்தம் ₹45 லட்சம் ரொக்கப் பரிசுத் தொகையுடன், 2 புதிய கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 செஸ் கடிகாரங்கள் சிறப்பு பரிசுகளாக வழங்கப்படுகின்றன.A பிரிவு போட்டிகள் கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் உள்ள ஹோட்டல் M Inn-ல் நடைபெறுகின்றன.B, C மற்றும் D பிரிவு போட்டிகள் கிணத்துக்கடவிலுள்ள அக்ஷயா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டியில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், 40 முதல் 45 கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் சர்வதேச மாஸ்டர்கள் பங்கேற்பார்கள் என்றும், சுமார் 2,000 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த சர்வதேச போட்டி, இந்திய இளம் வீரர்கள் கிராண்ட்மாஸ்டர் (GM), சர்வதேச மாஸ்டர் (IM) நார்ம்களைப் பெற சிறந்த வாய்ப்பை வழங்குவதுடன், தமிழகத்தில் சதுரங்க வளர்ச்சிக்கு மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் பேசுகையில்,
40 ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் மீண்டும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் சதுரங்கப் போட்டி நடைபெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும் என்றார். சதுரங்கம் மாணவர்களின் சிந்தனைத் திறன், ஒழுக்கம் மற்றும் முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் சிறந்த விளையாட்டு என்றும், இந்தப் போட்டி தமிழக இளம் வீரர்களுக்கு உலகத் தரத்தில் தங்களை நிரூபிக்க சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போட்டியை வெற்றிகரமாக நடத்தும் அனைத்து அமைப்புகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
அக்ஷயா பொறியியல் கல்லூரி – ஹோட்டல் எம் இன் – மிராக்கிள் ஸ்கூல் ஆஃப் செஸ் – கோயம்புத்தூர் மாவட்ட சதுரங்கச் சங்கம் இணைந்து நடத்தும் இந்த சர்வதேச கிராண்ட்மாஸ்டர் போட்டி, தமிழகம் மற்றும் கோயம்புத்தூர் இளம் வீரர்களுக்கு உலகத் தரத்திலான போட்டி அனுபவத்தை வழங்கி, எதிர்கால கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.