June 21, 2026
தண்டோ
கோவையில் மக்கள் தொடர்பு மற்றும் நிறுவனங்களின் தகவல் தொடர்புத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் (பி.ஆர்.சி.ஐ) தனது புதிய கிளையை கோவையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இதற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை அன்று கோவை ‘தி கிராண்ட் ரீஜெண்ட்’ ஹோட்டலில் நடைபெற்றது.இந்த விழாவில் அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனப் பிரதிநிதிகள், தொழில்முனைவோர் மற்றும் ஊடகத்துறையினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, பி.ஆர்.சி.ஐ கோவை கிளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி, டாக்டர் S. பிரகதீஸ்வரன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் மக்கள் தொடர்புத் துறை பொது மேலாளர், தலைவராகப் பொறுப்பேற்றார். கற்பகம் உயர்கல்வி அகாடமியின் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஆதி பாண்டியன் செயலாளராகவும், G.K.N.M. நிறுவனத்தின் பிராண்டிங் மற்றும் ஊடகத் தொடர்புத் துறைத் தலைவர் திரு. கோகுல் பொருளாளராகவும் பொறுப்பேற்றனர்.
மேலும் பி.ஆர்.சி.ஐ அமைப்பின் தேசியத் தலைவர் கீதா சங்கர், நிர்வாகக் குழுத் தலைவர் டாக்டர் டி. விநய் குமார் மற்றும் அமைப்பின் வழிகாட்டி எம். பி. ஜெயராம் ஆகிய தேசிய நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டு, இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதன் அவசியத்தைப் பற்றிப் பேசினர்.
பொறுப்பேற்றுக் கொண்ட புதிய தலைவர் டாக்டர் எஸ். பிரகதீஸ்வரன் பேசுகையில், கோவையில் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் மூலம் தகவல் தொடர்புத் துறையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த புதிய கிளை, கோவையில் உள்ள மக்கள் தொடர்பு வல்லுநர்கள் தங்களுக்குள் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும் ஒரு சிறந்த தளமாக இருக்கும் எனக் கூறினார்.
செயலாளர் ஆதி பாண்டியன் பேசுகையில், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஊடகம் மற்றும் அரசு அமைப்புகளுக்கு இடையே நல்லதொரு பிணைப்பை உருவாக்குவதே தங்களின் முக்கிய இலக்கு என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தின் தகவல் தொடர்புத் துறை மூத்த மேலாளர் வி. பழனியப்பன் அவர்களுக்கு, இந்தத் துறையில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி பி.ஆர்.சி.ஐ நிர்வாகிகள் கௌரவித்தனர்.