May 16, 2026
தண்டோரா குழு
அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தலைமைக் கழகத்தின் எதிர்ப்பை மீறி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி உள்கட்டமைப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி நியமனம் செய்யப்பட்டார்.
கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிந்துரையின் பேரில் நியமனம் செய்யப்பட்டவர்களாக உள்ளனர். இவர்கள் மாவட்ட அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கட்சிக்கு புத்துயிர் தரும் வகையில் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை குறிப்பாக வட்டக் கழக, பகுதி கழக,வார்டு நிர்வாகிகளை நியமனம் செய்ய செ.ம.வேலுசாமி தீவிரம் காட்டி வருகிறார்.கோவை மாவட்டத்தில் கட்சிக்காக தொடர்ந்து வேலை செய்து வரும் இளைஞர்கள் மற்றும் திறன்மிக்கவர்களுக்கு பதவி வழங்க ஏற்பாடு நடக்கிறது.
எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே பதவி வழங்கி வந்த நிலையில் கட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காத பகுதி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாராகி வருகிறது.விரைவில் எஸ்.பி.வேலுமணி தரப்பு நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.