May 15, 2026
தண்டோரா குழு
கோவையில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் (TAASI) மற்றும் பாம்பே பட்டயக்கணக்காளர் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் “IPO மற்றும் வரி உச்சி மாநாடு 2026” இன்று தொடங்கியது.
மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து 70-க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்களும், 50-க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், வரி ஆலோசகர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்க செயலாளர் எல். காமேஷ், தலைவர் எஸ். வெங்கடேஷ், பொருளாளர் மகேஷ் பிரபு, பாம்பே பட்டயக்கணக்காளர் சங்க தலைவர் ஜூபின் பில்லிமோரியா, இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் கோவை கிளை தலைவர் மற்றும் TAASI குழு உறுப்பினர் சுர்வஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் துவக்க விழாவில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் கோவை கிளை முன்னாள் தலைவர் CA G. ராமசாமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இந்திய தொழில் மற்றும் நிதிச் சூழல் வேகமாக மாறிவரும் நிலையில், நிதி மேலாண்மை, வரி நிர்வாகம், நிறுவன ஆளுமை மற்றும் தொழில்முறை ஒழுக்கம் ஆகிய துறைகளில் தொடர்ச்சியான அறிவு மேம்பாடு அவசியம் என அவர் தெரிவித்தார்.மேலும், தேசிய அளவிலான தொழில்நுட்ப மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்தி வரும் TAASI மற்றும் பாம்பே பட்டயக்கணக்காளர் சங்கத்தின் முயற்சியை பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாம்பே பட்டயக்கணக்காளர் சங்க தலைவர் ஜூபின் பில்லிமோரியா,
கோயம்புத்தூர் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் தொழில் மற்றும் தொழில்முனைவு மையங்களில் ஒன்றாக திகழ்கிறது என்றார். உற்பத்தி, பொறியியல், நெசவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப் துறைகளில் நகரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருவதாகவும், பல MSME மற்றும் குடும்ப நிறுவனங்கள் IPO, நிறுவன முதலீடுகள் மற்றும் Succession Planning போன்ற துறைகளில் முன்னேறி வருவதாகவும் கூறினார்.
TAASI தலைவர் எஸ். வெங்கடேஷ் பேசுகையில், தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கும் தொழில் வளர்ச்சிக்கும் இந்த மாநாடு முக்கிய பங்காற்றும் என்றார். IPO தயாரிப்பு, FEMA, GST, நேரடி வரி, Private Trusts மற்றும் நிறுவன ஆளுமை போன்ற தலைப்புகளில் நடைமுறை வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் IPO தயாரிப்பு, Merchant Banking, GST வழக்குகள், FEMA விதிமுறைகள் மற்றும் E-Way Bill நடைமுறைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து தேசிய அளவிலான நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.