March 13, 2026
தண்டோரா குழு
வணிக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை கண்டித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் சார்பில் கோவையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மண்டல தலைவர் பி.சுதர்சன் தலைமை தாங்கினார்.வணிகத்திற்கு பயன்படும் சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவி வருவதால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும்,சில இடங்களில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை நடைபெறுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
மேலும்,பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லாமல் சீராக விநியோகிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் தங்கசாமி, மாநில செயலாளர் வேதநாயகம், கரூர் மாவட்ட மாநில துணைத் தலைவர் முருகேசன்,மேற்கு மண்டல தலைவர் சக்திவேல்,திருப்பூர் மாவட்ட தலைவர் ஆத்திச்செல்வன்,கரூர் மாவட்ட தலைவர் ஹைகோர்ட் முத்து,கரூர் மாவட்ட பொருளாளர் ஜஸ்டின்,கிழக்கு மாவட்ட தலைவர் ஜெபதுரை,மேற்கு மாவட்ட தலைவர் ஜெயமுருகன்,தெற்கு மாவட்ட தலைவர் சேர்மகனி,வடக்கு மாவட்ட தலைவர் கிஷோர்,ஆலந்துறை கிளை தலைவர் வள்ளல் கருணாகரன்,செல்வபுரம் தலைவர் விஜி மணி, பெரியநாயக்கன்பாளையம் பாபு அய்யாதுரை, துடியலூர் கிளை தலைவர் கணபதி ராமன், சூலூர் ஒன்றிய தலைவர் ஜபத்துரை,ஒத்தக்கால் மண்டபம் கிளை தலைவர் லிங்கராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.