January 22, 2026
தண்டோரா குழு
டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் புதிய லோகோ அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எல்.எம்.டபிள்யு. லிமிடெட், இந்திய அனிமேஷன் திரைப்பட நிபுணர் சுரேஷ் ஏரியாட் இணைந்து அறிமுகப்படுத்தினார்
டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி சார்பில் படைப்பு துறை, கலை, மேடை நாடகம், திரைப்படம், சமூக அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள், முன்னோடிகளை ஒரே மேடையில் அணிதிரட்டி, அவர்களை கொண்டு கோவை பற்றிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சி “லெட்ஸ் டாக் இன் கோவை” (பேசலாம் கோவையில்…) ஒன்றை நடத்திட முடிவு செய்யப்பட்டு, அதன் முதல் நிகழ்ச்சி இன்று மணி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியானது முழுமையான, சமூகப் பொறுப்புணர்வுமிக்க மற்றும் தொழில்முறை சார்ந்த கல்வியை வழங்குவதில் டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. அத்துடன் கோவை மாநகரின் நலனுக்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு கல்விச் சூழலை வழங்க இது முயல்கிறது.
இந்த நிகழ்வில் எல்.எம்.டபிள்யு. லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு; ஜி.கே.டி. சேரிட்டி டிரஸ்டின் அறங்காவலர் லலிதா தேவி சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு, டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி டீன் வைத்தியநாதன் ராமசுவாமி, கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் மைக்கல், யங் இந்தியன்ஸ் கோவை கிளையின் தலைவர் நீல் கிக்கானி; சிறப்பு அழைப்பாளர்கள், பல்வேறு துறை நிபுணர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ என தலைப்பிடப்பட்ட முதல் சொற்பொழிவு இன்று நடைபெற்றது. இதில் இந்திய அனிமேஷன் துறையில் ஒரு முன்னோடியாக திகழும் சுரேஷ் ஏரியாட் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதன் பின்னர் டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் புதிய லோகோ வெளியிடப்பட்டது. இத்துடன் சுரேஷ் அவர்களின் சிறந்த திரைப்படைப்புகள் சில காட்சிப்படுத்தப்பட்டது.
டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி வழங்கிய இந்த நிகழ்ச்சி இந்திய தொழில் கூட்டமைப்பு சி.ஐ.ஐ.-யின் அங்கமான யங் இந்தியன்ஸ் – கோவை கிளை அமைப்புடன் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எல்.எம்.டபிள்யு. லிமிடெட் ஆதரவளித்தது.
நிகழ்வின் போது, எல்.எம்.டபிள்யு. லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு மற்றும் சுரேஷ் ஏரியாட் இணைந்து சி.ஐ.ஐ. புதிய லோகோ-வை அறிமுகம் செய்து வைத்தனர். அவரை தொடர்ந்து ‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ எனும் தலைப்பில் சுரேஷ் ஏரியாட் பேசினார். சுரேஷ் ஏரியாட், 1973-ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர்.
இந்திய அனிமேஷன் துறையின் போக்கையே மாற்றியமைத்த ஒரு முன்னோடியாக அறியப்படுகிறார். அகமதாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் முன்னாள் மாணவரான இவர், அனிமேஷன் என்பது வெறும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு வலிமையான கதைசொல்லும் ஊடகம் என்பதை உலகிற்கு நிரூபித்தவர்.
400க்கும் மேற்பட்ட படங்களில் இவரின் அனிமேஷன் ஆளுமை வெளிப்பட்டுள்ளது. இவரின் தனித்துவம் கொண்ட திறமையால் 100க்கும் அதிகமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.
“லெட்ஸ் டாக் இன் கோவை” யின் கீழ் ‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ என தலைப்பிடப்பட்ட முதல் சொற்பொழிவில் பேசிய சுரேஷ், கேரளாவின் திருப்பூணித்துறையில் தொடங்கிய தனது ஆரம்பகால வாழ்க்கை, கல்விப்பயணம் மற்றும் விளம்பரத்துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகள் முதல் ‘ஸ்டுடியோ ஈக்சாரஸ்’ எனும் நிறுவனத்தை உருவாக்கியது வரையிலான தனது படைப்புப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அத்துடன், விருது பெற்ற தனது திரைப்படங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள் வாயிலாக, சமூக-கலாசார யதார்த்தங்களில் வேரூன்றிய உள்ளூர் கதைகள் எவ்வாறு உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் அவர் விளக்கினார்.