November 13, 2018 தண்டோரா குழு
ஏழு பேர் யார் என்று தெரியாத அளவிற்கு நான் முட்டாள் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது ஏழு பேர் விடுதலை குறித்த கேள்வுக்கு எந்த 7 பேர்? என கேட்டது பெரும் சர்ச்சை கிளப்பியது.அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் அவரை விமர்சித்து வந்தனர்.இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு,ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர்,
“நான் பேசியது திரித்துக்கூறப்படுகிறது.எனக்கு தெரியாது என்ற மாயை உருவாக்கப்படுகிறது.எனக்குத்தெரியும் என்றால் தெரியும் என்று சொல்லிவிடுவேன். தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லிவிடுவேன். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் குறித்து ஏழு பேர் யார் என்று தெரியாத அளவிற்கு ரஜினிகாந்த் முட்டாள் கிடையாது.
என்னைப்பொறுத்தவரைக்கும் அந்த கேள்வி தெளிவாக கேட்கப்படவில்லை.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் என்று,அந்த கேள்வி கேட்டப்பட்டிருந்தால் உடன் பதில் சொல்லியிருப்பேன்.எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் என்று சொன்னதால் நான் புரியாமல் எந்த ஏழு பேர் என்று கேட்டேன். மற்றபடி,மனிதாபிமான அடிப்படையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம்.பேரறிவாளன் பரோலில் வந்தபோது நான் அவரிடம் 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேசி அவருக்கு ஆறுதல் கூறினேன்.
மேலும்,பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால்,அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே.ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி. மோடிதான் பலசாலி என நீங்கள் சொல்வதாக செய்தி போடலாமா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு,இதை விட தெளிவாக சொல்ல முடியுமா என்று பதில் கேள்வி கேட்டார் ரஜினிகாந்த்.பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது. அதை மக்கள் முடிவு செய்யட்டும்.நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை,முழுமையாக இறங்கியதும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வேன்.அமைச்சர்கள் நாகரீகமாக கருத்து தெரிவிப்பது நல்லது.இலவசங்கள் 100 சதவீதம் தேவை,அது ஓட்டுக்காக இருக்க கூடாது” இவ்வாறு பேசினார்.