March 20, 2018 தண்டோரா குழு
புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்ட தபெதிக,திவிக அமைப்பினர் 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், நெல்லையில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்தும் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.வி.க, தமிழ்புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தீடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது புதுக்கோட்டையில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும்,ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டதற்கு கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மதக்கலவரத்தை தூண்ட நினைக்கும் இந்து அமைப்பினரையும், பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவையும் கைது செய்ய வேண்டும் எனவும் மறியல் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.மேலும் ரதயாத்திரையை தடுக்காத மாநில அரசையும் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பிய அவர்கள்,பெரியாரின் சிலையை உடைத்தவர்களை தமிழக அரசு கைது செய்து வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.