August 30, 2016 தண்டோரா குழு
கோவையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.கோவை மாவட்டம் வீரபாண்டி பிரிவு,பயனீர் நகர்ப் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மனைவி பத்மினி(51).
இவர்,கடந்த வாரம் கணவருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று வந்துள்ளனர்.இந்த நிலையில் திடீர் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து கடந்த 24ம் தேதி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.நீண்ட சிகிச்சைக்குப் பின்னும் காய்ச்சல் குறையாததால் செய்யப்பட்ட சோதனையில் இவருக்குக் கடந்த 27ம் தேதி பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து பன்றிக்காய்ச்சல் வார்டில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
இவர்,வைரல் நிமோனியா காய்ச்சல்,சிறுநீரக கோளாறு மற்றும் ரத்த கொதிப்பு பாதிப்புகளின் காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும்,தற்போது பன்றிக்காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வரும் ஊட்டி கெம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிரியன்(64) என்பவரது நிலைமையும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.