December 30, 2017
தண்டோரா குழு
கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் மனைவியையும் குழந்தைகளையும் துபாய் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் தங்களது கடமையையே செய்ததாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
தென்னாப்ரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி டெஸ்ட்,ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கிடையில், தென்னாப்பிரிக்கா செல்ல மும்பையில் இருந்து குடும்பத்தோடு துபாய் செல்ல சென்ற தவான் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் சில ஆவணங்களைக் கேட்டு, தமது மனைவியையும், குழந்தைகளையும் எமிரேட்ஸ் நிறுவனம் விமானத்தில் ஏறவிடாமல் தடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதுமட்டுமின்றி எமிரேட்ஸ் நிறுவன பணியாளர் ஒருவர், காரணமே இன்றி தங்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதாகவும் தவான் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள எமிரேட்ஸ் நிறுவனம், தென் ஆப்பிரிக்க நாட்டு விதிகளின்படி 18 வயதுக்கு குறைவான நபர்களை உடன் அழைத்துச் செல்பவர்கள், அவர்களின் பெற்றோர் அல்லது நம்பகமான பாதுகாவலர் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியே தவானின் குடும்பத்தினரை அனுமதிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளது.