• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதக் கலவரத்துக்கு இலங்கை வீரர்கள் கண்டனம்

March 8, 2018 tamilsamayam.com

புத்த மதத்தினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே இலங்கையில் மூண்டிருக்கும் கலவரத்துக்கு ஜெயவர்த்தனே, சங்ககாரா உள்ளிட்ட அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் புத்த மதத்தினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது. கண்டி மற்றும் அம்பாரா பகுதியில் கலவரம் வெடித்துள்ளது. இந்த கலவரம் பரவுவதை தடுக்கும் வகையில், அந்நாட்டில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில் இந்தக் கலவரத்திற்கு இலங்கை வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“இலங்கையில் யாரும் தங்கள் இனம் அல்லது மதத்தின் பெயரால் அச்சுறுத்தப்படவோ பாதிக்கப்படவோ கூடாது. நாம் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். அன்பு, நம்பிக்கை மற்றும் பொறுமை ஆகியவைதான் நமக்குத் தாரக மந்திரம். இனவெறிக்கோ வன்முறைக்கோ இடமில்லை.” என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் நடக்கும் வன்முறை வெறுப்பையும் கஷ்டத்தையும் அளிக்கிறது. நான் இதனை கடுமையாகக் கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீதிக்கும் நிறுத்தப்பட வேண்டும். இந்த கடினமான காலத்தில் இலங்கை மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கோருகிறேன்” என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா கூறியுள்ளார்.

“தற்போது நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும். நான் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு மத்தியில் வளர்ந்தவன். அது அடுத்த தலைமுறையிலும் தொடர விரும்பவில்லை.” என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

“முப்பது ஆண்டுகளாக யுத்தத்தின் விளைவாக இலங்கை மக்கள் போதுமான அளவுக்கு பாதிக்கப்பட்டுவிட்டார்கள். நாம் நேசித்த பலரை இழந்தோம். நமது நம்பிக்கையும் கனவுகளும் நொறுக்கப்பட்டன. வெறுப்பையும் வன்முறையையும் பரப்பும் இனவெறியாளர்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” என்று இலங்கை வீரர் மேத்யூஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க