October 7, 2017
அமெரிக்க அணிக்கு எதிரான 17 வயதுக்கு உட்படோருக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடரின் லீக் கோட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இந்தியாவில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நடத்தும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை தொடர் இன்று துவங்கியது. இதில் இந்திய அணி உட்பட சுமார் 24 சர்வதேச அணிகள் பங்கேற்கிறது.
இப்போட்டிகள் கொல்கத்தா, டெல்லி, கவுகாத்தி, நவி மும்பை, மார்கோ, கொச்சி என 6 நகரங்களில் நடக்கவுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் 6 அணிகள் என நான்கு பிரிவுகளாக லீக் போட்டிகள் நடக்கும். இதன் முடிவில், நாக்- அவுட் போட்டிகள் நடக்கும்.
இதில் டெல்லியின் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடந்த ‘குரூப்-ஏ’ பிரிவின் இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி, அமெரிக்கா அணியை எதிர் கொண்டது. இதில் துவக்கம் முதல் இந்திய வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
போட்டியின் முதல் பாதியின் 30வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, அமெரிக்க வீரர் சார்ஜெண்ட் கோலாக மாற்றினார். இதற்கு இந்திய அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதையடுத்து முதல் பாதியில் 1-0 என அமெரிக்க அணி முன்னிலை பெற்றது.
பின் பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியிலும் அமெரிக்க வீரர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. இந்நிலையில், டர்கின் (51வது நிமிடம்), கார்லிடான் (84) என அமெரிக்க அணி இரட்டை அடி கொடுத்தது.
இதற்கு எவ்வளவு போராடியும் கடைசி வரை இந்திய அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இறுதியில் அமெரிக்க அணி 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
பராகுவே வெற்றி:
இதே போல நவி மும்பையின் படேல் மைதானத்தில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில், பராகுவே, மாலி அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் பராகுவே அணிக்கு, காலியானோ (12வது நிமிடம்), சான்ஷீஸ் (17) இரண்டு கோல் அடித்தனர். இதற்கு மாலி அணியின் டிராமே (20), தியே (34) ஆகியோர் பதிலடி கொடுக்க, முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலை வகித்தது.
பின் அனல் பறக்க துவங்கிய இரண்டாவது பாதியில் பராகுவே வீரர் ரோட்ரிகுஸ் (55) பெனால்டி வாய்ப்பில் ஒரு கோல் அடித்தார். இதற்கு மாலி அணி வீரர்களால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியவில்லை. முடிவில், பராகுவே அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.