October 9, 2018
தண்டோரா குழு
துணை வேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியதாக சில கல்வியாளர்கள் கூறியதன் அடிப்படையிலேயே ஆளுநர் தனது கவலையை தெரிவித்ததாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்றதாக தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் விழா ஒன்றில் கலந்துக்கொண்ட போது கூறினார்.ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்கள் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறி வந்த நிலையில்,தற்போது தமிழக ஆளுநரும்,பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித்தும் கூறியிருப்பது கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு,ஆளும் அதிமுக அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,ஆளுநர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“துணைவேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியதாக சில கல்வியாளர்கள் தன்னிடம் கூறியதன் அடிப்படையிலேயே,சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது கவலையை ஆளுநர் தெரிவித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும்,துணைவேந்தர் நியமன விவகாரத்தில் யார் மீதும் லஞ்ச புகாரோ,ஊழல் புகாரோ,ஆளுநர் தெரிவிக்கவில்லை என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளது.அதைபோல் லஞ்ச ஒழிப்புத்துறையால் ஒரு துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளதையும்,இரு துணை வேந்தர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதையும் ஆளுநர் மாளிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும்,துணை வேந்தர் நியமனத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள ஆளுநர் மாளிகை,நடப்பாண்டில் நியமிக்கப்பட்ட 9 துணை வேந்தர்களும் தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது”.